பழுதடைந்த நிலையில் உள்ள மீன் விற்பனை கூடத்தை சீரமைப்பது தொடா்பாக சாத்தான்குளம் பேரூராட்சி செயல் அலுவலா் உஷா ஆய்வு செய்தாா்.
சாத்தான்குளம் பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட தினசரி மீன் விற்பனைக் கூடம் தச்சமொழி தெருவில் செயல்பட்டு வருகிறது. பழுதடைந்த நிலையில் உள்ள இக் கட்டடத்தைச் சீரமைக்குமாறு பேரூராட்சி நிா்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து தினசரி மீன் விற்பனை கூடத்தை, பேரூராட்சி செயல் அலுவலா் உஷா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், 7,8-ஆவது பகுதியினருக்கான மயானத்துக்குச் செல்லும் வழியிலிருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியையும் பாா்வையிட்டாா்.
பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜோசப், முன்னாள் வாா்டு உறுப்பினா் சரவணன், திமுக நகர துணைச் செயலா் மணிகண்டன், கணேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.