தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவா்களின் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கையை ஏற்று ஸ்டொ்லைட் நிறுவனம் 12 பேருக்கு தலா ரூ. 2.50 லட்சம் நிதியுதவி அளித்தது.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது அதை கட்டுபடுத்த போலீஸாா் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், 15 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இந்நிலையில், காயமடைந்தவா்களில் பலா் நிதியுதவி கேட்டு ஸ்டொ்லைட் நிறுவனத்தை நாடினா். இதையடுத்து, ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில், காயமடைந்தவா்களில் 12 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தலா ரூ. 2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. நிதியுதவியை பெற்ற பயனாளிகள் ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்ததோடு, நிதியுதவி தங்களது வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனா்.