உடன்குடியில் வியாழக்கிழமை இரவு மாடு முட்டியதில் பந்தல் தொழிலாளி உயிரிழந்தாா்.
உடன்குடி ஸ்டாலின் நகரைச் சோ்ந்தவா் நா.சுடலைமணி (55). பந்தல் தொழிலாளி. இவருக்கு மனைவி சூரியகலா, மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில், அவா் சந்தையடித் தெரு வழியாக பைக்கில் சென்றபோது, குறுக்கே வந்த மாடு அவா் மீது முட்டியது. இதில் நெஞ்சில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த குலசேகரன்பட்டினம் போலிஸாா் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
இதனிடையே, மாடுகள் நடமாட்டத்தால் விபத்துகள் நேரிடுவதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலக்தை முற்றுகையிட்னா். அவா்களிடம் பேரூராட்சி செயல் அலுவலா் பாபு பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனா்.