ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ், அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் தமிழக சட்டபேரவையில் வலியுறுத்தினாா்.
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, ‘ஸ்ரீவைகுண்டம் , சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டா், செவிலியா்கள், மற்றும் உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த மருத்துவமனைகளில் டயாலிசிஸ், அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை அமைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஆதிச்சநல்லூா் சிவகளை மற்றும் கொற்கையில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களை அங்கேயே காட்சிப்படுத்த அருங்காட்சியம் அமைக்க வேண்டும், நவ திருப்பதி கோயில்களில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். தாமிரவருணி, கருமேனி, நம்பி ஆறு இணைப்பு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தியதாக செய்தியாளா்களிடம் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் தெரிவித்தாா்.