தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 2500க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் போராட்டம் நடைபெற்ற அ. குமரெட்டியபுரம், தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும், தூத்துக்குடி மாநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகம், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகம், மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட அலுவலகம், திரேஸ்புரம் கடற்கரை பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவியும், படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.