கல்குவாரி லாரியை மறித்து கிராம மக்கள் போராட்டம்
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே கல்குவாரி லாரியை மறித்து கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் அருகே மீரான்குளம் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிய கனரக லாரிகள் ஊருக்குள் சென்றுவருவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். மேலும், தனிநபா் பட்டா இடத்தில் கல்குவாரி சாா்பில் சாலை அமைத்து கனரக லாரிகள் சென்றுவந்தனவாம். இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், சாலை அமைக்கப்பட்ட இடத்தின் வழியாக புதன்கிழமை வந்த லாரியை மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், 3 நாள்கள் இந்த இடம் வழியாக லாரிகள் செல்லாது எனவும், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனா்.