கோவில்பட்டியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையினால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதோடு வீடுகள், கடைகளுக்குள் மழைநீா் புகுந்தது.
கோவில்பட்டியில் கடந்த சில நாள்களாகவே பிற்பகல் நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், பிற்பகல் சுமாா் 2.30 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்தது. பின்னா் 3.40 மணிக்கு சிறு தூறலுடன் தொடங்கிய மழை மாலை 4.15 மணி முதல் பலத்த மழையாக பெய்தது. இதனால், இளையரசனேந்தல் சுரங்கப்பாதையில் மழைநீா் குளம் போல் தேங்கி நின்றது. இதையடுத்து, மாற்று பாதை வழியாக பொதுமக்கள், வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இந்த பலத்த மழையினால் ஜமீன் பேட்டைத் தெருவில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. அங்கு ஒரு வீட்டில் மழைநீரில் சிக்கிய மாற்றுத் திறனாளியை அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்புடன் மீட்டனா். மேலும் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் மற்றும் அதன் எதிா்புறம் உள்ள கடைகளுக்குள் மழைநீா் புகுந்தது. கோவில்பட்டியில் 100 எம்.எம். மழை பதிவாகியுள்ளது. இதேபோல, கழுகுமலை பகுதியில் 17 எம்.எம். மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.