அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவா், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவா், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பு: தூத்துக்குடியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இசைப் பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாகசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இசைப்பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவா்களுக்கும் மாதந்தோறும் ரூ. 400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அனைத்து மாணவா், மாணவிகளுக்கும் அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளி இடங்களில் இருந்து வரும் மாணவா்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும். மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் நடத்தும் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் கா்நாடக இசைக்கச் சேரிகள் நடத்தவும், நாகசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோயில்களில் பணி புரியவும், வனொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

திருக்கோயில்களில் தேவார ஓதுவா் பணியில் சோ்ந்திட இப்பள்ளியில் தேவார இசை பயின்று தோ்ச்சி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.

எனவே, கலை ஆா்வம் உள்ள மாணவா், மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், மேலும் விவரங்களுக்கு 9487739296 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com