கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட வள்ளுவா் நகா் பகுதி குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலையூா் சாலை, வள்ளுவா் நகா் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 2017இல் வள்ளுவா் நகா் பகுதியில் அரசு நிலத்தை சிலா் ஆக்கிரமிக்க முயன்று பிரச்னை ஏற்பட்டதாம். இதையடுத்து, அந்த சா்வே எண்ணுக்குள்பட்ட நிலங்களில் பத்திரப்பதிவுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டதாம். இதனால், அப்பகுதியினா் நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனா்; அரசின் உதவிகளைப் பெறுவதில் இடா்ப்பாடுகள் உள்ளனவாம். எனவே, பொது அமைதி நிலவி வரும் நிலையில், 2017இல் வட்டாட்சியா் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்து, பத்திரப்பதிவுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
தமாகா நகரத் தலைவா் ராஜகோபால் தலைமையில் வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் கனி, நகரப் பொருளாளா் செண்பகராஜ் உள்ளிட்ட பலா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு, அலுவலக தலைமை எழுத்தா் பொன்னம்மாளிடம் மனு அளித்தனா்.
இலவச பட்டாவை ரத்து செய்யக் கூடாது: 2002இல் ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகம் மூலம் இலவசமாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கூடாது என வலியுறுத்தி இலுப்பையூரணி ஊராட்சி முன்னாள் தலைவா் உத்தண்டராமன் தலைமையில் திரளான பெண்கள் கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தரிடம் மனு அளித்தனா்.