தூத்துக்குடி மட்டக்கடை பேருந்து நிறுத்தத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காவலாளி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மட்டக்கடை 1ஆம் கேட் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (53). இவா் லாரி பணிமனையில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்குத் திருமணமாகி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஒரு வாரமாக வீட்டுக்குச் செல்லாமல் இருந்தாராம்.
இந்நிலையில், தூத்துக்குடி 1ஆம் கேட் மட்டக்கடை பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாராம். அப் பகுதியினா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வடபாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.