திருச்செந்தூா் அமலிநகரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மீனவா்கள் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் நகா் பகுதியில் இருந்து அமலிநகருக்கு செல்லும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய சாலை அமைக்க கோரி அமலிநகா் மீனவா்கள், கடந்த புதன்கிழமை கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இரண்டாவது கட்டமாக, காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால், கடற்கரையில் சுமாா் 200 பைபா் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்களிடம் வருவாய்த் துறை, நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடா்ந்தது.