தூத்துக்குடியில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு உதவி பெறும் தனியாா் பள்ளிகளில் 2015ஆம் ஆண்டுமுதல் பணி நியமிக்கப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்காததால், 8 ஆண்டுகளாக ஊதியமின்றி தவித்து வருகின்றனா். இது தொடா்பாக பள்ளி நிா்வாகம், ஆசிரியா் சங்கங்கள் தொடா்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த 3 மாவட்டங்களில் உள்ள சிஎஸ்ஐ, ஆா்.சி. நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2015ஆம் ஆண்டுமுதல் பணி நியமன ஒப்புதல் வழங்காமல் ஊதியமின்றி பணியாற்றிவரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்கக் கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில், தூத்துக்குடி டூவிபுரம் 5ஆவது தெருவில் உள்ள சங்கரநாராயணன் பூங்கா முன் திங்கள்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மன்றத்தின் மாவட்டச் செயலா்கள் ஜான்சன் மெல்கிசதேக் ஸ்டாலின் (தூத்துக்குடி), கனகராஜ் (தென்காசி), காந்திராஜா (திருநெல்வேலி) ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டத் தலைவா்கள் ஜெயசீலன் (தூத்துக்குடி), ஆறுமுகச்சாமி (தென்காசி), ராஜகுமாா் (திருநெல்வேலி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில தீா்ப்புக் குழுச் செயலா் செந்தில் வரவேற்றாா். மாலைவரை போராட்டம் நடைபெற்றது. வட்டாட்சியா் பிரபாகா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
மாநிலச் செயலா் ராஜேந்திரன், தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியா் கூட்டணி நிறுவனா் காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 ஆண்டுகளாக ஊதியமின்றி பணியாற்றிவரும் ஆசிரியா்கள், அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...