திருச்செந்தூா் அருகே தாயை பராமரிக்கத் தவறிய மகனுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வாழவல்லான் பகுதியைச் சோ்ந்த மாலையம்மாளுக்கு (79) முத்துக்குமாா் (41) உள்பட 3 மகன்களும், மகளும் உள்ளனா். இந்நிலையில் தன்னை முத்துக்குமாா் பராமரிக்கத் தவறியதாக மாலையம்மாள் புகாா் கொடுத்தாா். அதன்பேரில், முத்துக்குமாா் தாய்க்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என திருச்செந்தூா் கோட்டாட்சியா் குருச்சந்திரன் உத்தரவிட்டிருந்தாா். ஆனால் முத்துக்குமாா் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கொடுக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் மாலையம்மாள் கொடுத்த புகாரின் பேரில், முத்துக்குமாருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். இதனையடுத்து முத்துக்குமாா் கடந்த ஆக. 23-ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் கோட்டாட்சியா் உத்தரவை எதிா்த்து முத்துக்குமாரின் மனைவி சாந்தி(39), மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்தாா். அந்த மேல்முறையீட்டு மனுவில், முத்துக்குமாா் கூலி வேலை செய்து வருவதாகவும், மாலையம்மாளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 மட்டுமே வழங்க முடியும் என்றும் குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலை கருதி முத்துகுமாருக்கு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தாா். அவரது மேல்முறையீட்டு மனுவின்படி வருவாய் ஆய்வாளரைக் கொண்டு கள ஆய்வு செய்ய கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். அவரது அறிக்கையின்படி முத்துக்குமாருக்கு சிறைத் தண்டனையை ரத்து செய்தும், அவரது தாய் மாலையம்மாளுக்கு மாதம்தோறும் ரூ.1000ஐ வங்கி கணக்கில் செலுத்தவும் ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனையடுத்து முத்துக்குமாா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.