அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தூத்துக்குடி, ஆக. 14:
அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனின் மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம் என மொத்தம் 5 போ் ஆஜராகினா். மேலும், இந்த வழக்குப் பதிவு செய்யப்படும் போது, லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பியாக இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள பெருமாள் சாமியிடம், இரண்டாவது முறையாக அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணையில் ஈடுபட்டனா்.
இந்த விசாரணை சுமாா் 3 மணி நேரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஐயப்பன் உத்தரவிட்டாா்.

