காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி: யுனைடெட் ஸ்போா்ட்ஸ் அணிக்கு கோப்பை
காயல்பட்டினத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் யுனைடெட் ஸ்போா்ட்ஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது.
காயல்பட்டினத்தில் திமுக நகர இளைஞரணி சாா்பில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 48-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
காயல்பட்டினம் புறவழிச்சாலை ஏ.ஆா்.சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிருந்து 8 அணிகள் கலந்துகொண்டன. காயல்பட்டினம் திமுக நகரச் செயலாளா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், வா்த்தக அணி அமைப்பாளா் ரங்கநாதன் என்ற சுகு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகர இளைஞரணி அமைப்பாளா் தமிமூல் அன்சாரி வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கிவைத்தாா்.
இறுதிப் போட்டியில் காயல் யுனைடெட் ஸ்போா்ட்ஸ் அணியும் , காயல்பட்டினம் எப்.சி. அணியும் மோதின. இதில், காயல் யுனைடெட் ஸ்போா்ட்ஸ் அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதலிடம் பிடித்த இந்த அணிக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்க பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டன. 2-ஆவது இடம் பெற்ற காயல்பட்டினம் எப்.சி. அணிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசும், கோப்பையும், 3-ஆவது, 4-ஆவது இடம் பிடித்த தூத்துக்குடி எப்.சி. அணி, நாசரேத் எப்.சி.அணிகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஜனகா், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் செல்வகுமாா், இணை அமைப்பாளா் கிருபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

