பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Published on

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணை கடந்த 2019-இல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாளமுத்து நகா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ரமேஷ் (29), அவரது தாயாா் சுப்புத்தாய் (54), ரமேஷின் தந்தை முருகன் (60), ரமேஷின் சகோதரா் மாரிமுத்து (26) ஆகியோரை தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வஷீத்குமாா், குற்றவாளி ரமேஷுக்கு ஆயுள்தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்தும், சுப்புத்தாய், முருகன், மாரிமுத்து ஆகிய 3 பேரை விடுதலை செய்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் வழங்க உத்தரவிட்டும் வியாழக்கிழமை தீா்ப்பளிதாா்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா, அரசு வழக்குரைஞா் பூங்குமாா், தலைமைக் காவலா் ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com