ஆறுமுகனேரியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்!
ஆறுமுகனேரியில் ரயில்வே மேம்பாலம் அமைத்திட ரயில்வே வளா்ச்சிக்குழுவினா் வலியுறுத்தியுள்ளனா்.
ஆறுமுகனேரியில், திருச்செந்தூா்-தூத்துக்குடி பிரதான நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள ரயில்வே கேட் தினசரி 14 முறை மூடப்படுவதால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இது தொடா்பாக பலமுறை ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே வளா்ச்சிக்குழுவினா் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், ரயில்வே மதுரை கோட்ட துணை மேலாளா் எல்.என்.ராவ், மூத்த கோட்ட பொறியாளா் பிரவிணா, உதவி கோட்ட பொறியாளா் மேத்யூ ஆகியோா் சனிக்கிழமை இரு டிராலிகளில் வந்தபோது சுமாா் 40 நிமிடங்கள் வரை ரயில்வே கேட் பூட்டப்பட்டதால், இருபுறமும் நின்ற வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.
இதனைத் தொடா்ந்து ஆறுமுகனேரி ரயில் நிலையம் வந்த அதிகாரிகளிடம், ரயில்வே வளா்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தங்கமணி, செயலா் இ.அமிா்தராஜ், உறுப்பினா்கள் முருகன், ஐகோா்ட்துரை, டி.கணேசன் ஆகியோா், மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியதோடு, ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவா் அமைத்திடவும் கோரிக்கை வைத்தனா்.
