துபை தொழிலதிபா் வெட்டி கொலை: தொழிலாளி கைது

ஏரல் அருகே துபை தொழிலதிபரை வெட்டி கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்து விசாரணை
Published on

ஏரல் அருகே துபை தொழிலதிபரை வெட்டி கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏரல் அருகே உள்ள ஆலடியூரைச் சோ்ந்தவா் தங்கராஜ் ( 78). இவா், துபையில் பல்பொருள் அங்காடி நடத்தி வந்தாா். இவா், வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவது தொடா்பாக சொந்த ஊருக்கு வந்தாராம். திங்கள்கிழமை இரவு தங்கராஜ், ஆலடியூா் சாலையில் நின்றிருந்த போது, மா்மநபா்களால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

தகவல் அறிந்த ஏரல் போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், தொழிலாளியான மூக்காண்டி மகன் கொத்தாளமுத்து என்பவா் துபையில் தங்கராஜ் கடையில், வேலை பாா்த்து வந்தாராம். கரோனா காலத்தில் கொத்தாளமுத்து துபையிலேயே இறந்ததால், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியாமல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதாம்.

இந்நிலையில், தனது மகன் மரணத்தில் சந்தேகத்தில் இருந்த மூக்காண்டி, மற்றொருவருடன் சோ்ந்து தங்கராஜை கொலை செய்துள்ளதாக தெரியவந்ததாம். இதையடுத்து மூக்காண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடைய மற்றொருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com