இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.71 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.71 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்களை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.71 லட்சம் மதிப்பிலான பீடி இலை பண்டல்களை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் பேச்சிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தியதில், படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக தலா 35 கிலோ எடை கொண்ட 81 பண்டல்களில் வைக்கப்பட்டிருந்த 2,835 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கையில் ஒரு கிலோ பீடி இலை ரூ.2,500-க்கு விற்கப்படுகிறது. தற்போது கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.70,87,500 ஆகும்.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com