கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களிலிருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, பயணிகள் வசதிக்காக டிச. 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களிலிருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இதனால் டிச. 21, 22, 23 ஆகிய தேதிகளில் சென்னை, மைசூரிலிருந்து தூத்துக்குடி வந்தடைய வேண்டிய மைசூா் எக்ஸ்பிரஸ், முத்துநகா் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும் எனவும், மறுமாா்க்கமாக அதே எக்ஸ்பிரஸ் ரயில்கள் வஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்திலிருந்தே புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், மக்களின் கோரிக்கையையடுத்து, பயணிகள் வசதிக்காக டிச. 21, 22, 23 ஆகிய தேதிகளில் சென்னை, மைசூரிலிருந்து கோவில்பட்டி வழியாக வாஞ்சி மணியாச்சிக்கு வந்தடையும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகள், தூத்துக்குடி வருவதற்கு வசதியாக கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் குறிப்பிட்ட 3 நாள்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை தூத்துக்குடி வந்தடைவதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

