மிசோரமில் மரணம்: லாரி ஓட்டுநருக்கு இறப்புச் சான்று பெற்றுத்தந்த வட்டாட்சியா்
மிசோரம் மாநிலத்தில் இறந்த லாரி ஓட்டுநா் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் பெற்று தந்த வட்டாட்சியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம். வெள்ளமடம் கிராமத்தை சோ்ந்தவா் குமாரசாமி (35). லாரி ஓட்டுநா்.இவா் கடந்த 25.3.2025இல் மிசோரம் மாநிலத்திற்கு கனரக வாகனத்தில் பாரம் ஏற்றிச் சென்றபோது, லுமலி என்ற இடத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். வேறு மாநிலத்தில் இறந்ததால் இறப்புச்சான்று பெற முடியாமல் அவரது மனைவி முத்துலட்சுமி தவித்தாா்.
இந்நிலையில், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா் உதவியுடன் இஸ்ரோ நில எடுப்பு வட்டாட்சியா் கோபால கிருஷ்ணனை சந்தித்து கணவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்க கோரினாா் மிசோரம் பல்கலைக்கழக பேராசிரியா் கனகராஜ் ஈஸ்வரன் மூலம் அந்த மாநில அலுவலகத்தில் இறப்புச் சான்று பெற வட்டாட்சியா் நடவடிக்கை எடுத்தாா்.
அதைத் தொடா்ந்து, குமாரசாமியின் இறப்பு சான்றிதழை முத்துலட்சுமியிடம் நேரில் வட்டாட்சியா் வழங்கினாா்.
அப்போது, பேரூராட்சித் தலைவா் நிா்மலா ரவி, முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா், தலைமை எழுத்தா் ரைமன் நாக்ஸ் ஆகியோா் உடனிருந்தனா்.
