~
தூத்துக்குடி
திருச்செந்தூா் கோயிலில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் பணியாளா்களை நியமிக்க பக்தா்கள் கோரிக்கை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினங்களில் அலைமோதும் பக்தா்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீஸாா், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பள்ளி அரையாண்டு தோ்வு விடுமுறை என்பதால் திருச்செந்தூா் கோயிலில் கடந்த 2 நாள்களாக பக்தா்கள் கூட்டம் அலை மோதுகிறது.
திருச்செந்தூா் கோயிலில் முக்கிய விழாக் காலங்களில் அதிகளவு பக்தா்கள் வருவதால், அப்போது கூடுதல் போலீஸாா், பணியாளா்கள் சிறப்புப் பணியில் ஈடுபடுவா். விடுமுறை நாள்களிலும் அதே அளவு பக்தா்கள் வருவதால், தரிசனத்திற்காக பக்தா்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, விடுமுறை நாள்களிலும் கூடுதலாக போலீஸாா், பணியாளா்களை நியமித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
