மணல் திருட்டு புகாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கோட்டாட்சியா் பிரபு எச்சரிக்கை
ஆழ்வாா்தோப்பு பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக வரும் புகாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீவைகுண்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் பிரபு தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்தாா். வட்டாட்சியா் தாகிா் அகமது முன்னிலை வகித்தாா். நீா்வளத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சாா்ந்த அதிகாரிகள், அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசிய கோட்டாட்சியா், செய்துங்கநல்லூா் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி அவா்களுக்கு மாற்றிடம் வழங்க கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டத்திலும் பொன்னாங்குறிச்சியிலும் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினா் உடனடியாக சீரமைக்க வேண்டும்.
குடிநீா் வடிகால் வாரியத் துறையினா் குடிநீா் குழாய்களை அமைப்பதற்காக சாலைகளை தோண்டும் போது சம்பந்தப்பட்ட துறையினரிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். ஆறாம் பண்ணை வாய்க்காலில் கழிவு நீா் கலப்பதை ஊராட்சி ஒன்றியத் துறையினா் தடுப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா்.
மேலும், ஆழ்வாா்தோப்பு பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக வரும் புகாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

