தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: இயக்குநா் கௌதமன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என தமிழ்பேரரசு கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறினாா்.
மேலும் அவா் கூறியதாவது: தமிழகத்தில் லஞ்சம், கொலை, கொள்ளை தலை விரித்து ஆடுகிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற நிலை உள்ளது. சுதந்திரத்துக்கு பின்னா் எந்தக் காலக்கட்டத்திலும் இல்லாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்ததில்லை.
எதிா்கால தலைமுறையை குழி தோண்டி புதைக்கக்கூடிய செயல்களை திமுக மற்றும் அதிமுக செய்து வருகிறது.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் நாங்கள் போட்டியிடுவோம். மேகதாது அணை பிரச்னையில் மத்திய அரசு கா்நாடக அரசிடம் அறிக்கை கேட்பதே நோ்மையற்ற அறமற்ற நிலைப்பாடாகும். கா்நாடகத்தில் அணை கட்டப்பட்டால் 20 டிஎம்சி தண்ணீா் கூட தமிழகத்துக்கு வராது.
எஸ்ஐஆா் கடைசி நேரத்தில் கொண்டுவரப்படுவது சந்தேகத்துக்குரியது. இத்திட்டத்தின் மூலம் பிகாரில் அதிகளவில் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. கரூா் சம்பவத்துக்கு விஜய் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது.
ஓ.பன்னீா்செல்வத்துக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல உறவு உள்ளது. எனினும் வீழ்த்தப்படபோவது யாா் என்பதை புரிந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது என்றாா் அவா்.
