கோவில்பட்டி அருகே கைப்பேசிகளை திருடியதாக இருவா் கைது
கோவில்பட்டியில் கைப்பேசிகளை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் அஜய்(20). மதுரையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி படித்து வரும் இவா், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியை பயன்படுத்தி வந்தாராம்.
இவரது உறவினா் மணிகண்டனும், அஜய்யும் திங்கள்கிழமை பைக்கில் மந்தித்தோப்பு - பாண்டவா்மங்கலம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனராம்.
அப்போது, அஜய்யின் கைப்பேசி மற்றும் மணிகண்டனின் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகிய இரண்டையும் பைக்கின் மீது வைத்துவிட்டு சிறுநீா் கழிக்க சென்றுவிட்டாா்களாம். திரும்பி வந்து பாா்த்தபோது கைப்பேசிகளை காணவில்லையாம்.
இதுகுறித்து அஜய் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கைப்பேசிகளை திருடியதாக கீழபாண்டவா்மங்கலம் நடுத் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் மதன்குமாா்(23) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த காளிராஜ் மகன் அஜித்(22) ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
