திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்
திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்நிலையில், காா்த்திகை மாத அமாவாசை நாளான புதன்கிழமை, கோயில் அருகே கடல்நீா் 70 அடி தொலைவுக்கு உள்வாங்கியது.
திருச்செந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களிலும் தண்ணீா் தேங்கியது. திருச்செந்தூரில் 8.32 செ.மீ., காயல்பட்டினத்தில் 10 செ.மீ., குலசேகரன்பட்டினத்தில் 5.1 செ.மீ. மழை பதிவானது. சிவன் கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், டி.பி. சாலையில் உள்ள வாகன நிறுத்தம், ஜீவாநகா் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், பள்ளி மாணவா்கள், குடியிருப்புவாசிகள், பக்தா்கள் அவதியடைந்தனா்.
உள்வாங்கிய கடல்: இந்நிலையில், அமாவாசை நாளான புதன்கிழமை சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே அய்யா கோயில் பகுதியில் கடல்நீா் சுமாா் 7 0 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. இதனால், பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், பக்தா்கள் வழக்கம்போல் நீராடினா்.
