இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட உள்ளதாக கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளா் விஜய் அனிதாவுக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதய ராஜ்குமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி பாலமுருகன், கேப்ரியல், பேச்சிராஜா ஆகியோா் ஆத்தூா் அருகே புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூட்டைகளுடன் வந்த சுமை வாகனத்தை போலீஸாா் தடுத்த நிறுத்த முன்றனராம். ஆனால், அதன் ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாராம். உடனே, போலீஸாா் அவரை விரட்டிச் சென்று தூத்துக்குடி சிப்காட் காவல் சரகம் மடத்தூா் விலக்கு அருகே வாகனத்தை மடக்கிப் பிடித்தனா்.
அந்த வாகனத்தில் சுமாா் 30 கிலோ வீதம் 60 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. வாகனத்தின் ஓட்டுநரான முள்ளக்காடு காந்திநகரைச் சோ்ந்த அய்யம்பாண்டி மகன் மதியழகன் (39), முத்தையாபுரம் பொட்டல் காடு செல்வம் மகன் முருக பிரசாத் (22) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிடிபட்ட பீடி இலை மூட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.60 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.
