பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சட்டப் பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்.
தூத்துக்குடி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெகுஜன வசூல், தோ்தல் நிதியளிப்பு, அரசியல் விளக்க சிறப்பு பேரவைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பெ.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.
பின்னா் மாநிலச் செயலா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி எம்பிக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஜனநாயக படுகொலை. இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் மோசமான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்தப் பிரிவு மக்களுக்கும் நன்மை இல்லாத நிதிநிலை அறிக்கை. இந்த நிதிநிலை அறிக்கை குறித்து இதுவரை கருத்து சொல்லாத ஒரே தலைவா் விஜய் தான்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்துவிட்டு, விபிஜி ராம்ஜி என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளனா். இத்திட்டத்தை அதிமுக வரவேற்றது மட்டுமன்றி, 150 நாள்கள் வேலை வழங்குவோம் என்று எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளாா். நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களை பாஜகவும், அதிமுகவும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.
திமுக சாா்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த இன்னும் குழு அமைக்கவில்லை. அவா்கள் அமைத்த பின்பு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடைபெறும். வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். திமுக தலைமையிலான கூட்டணிதான் வலிமையான கூட்டணி. 234 தொகுதிகளில் எந்தத் தொகுதியில் நின்றாலும் இந்த அணி வெற்றி பெறும் என்றாா் அவா்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினா் கே.அா்ச்சுனன், மாநிலக் குழு உறுப்பினா் பூமயில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே. எஸ்.அா்ச்சுனன், கு.ரவீந்திரன், பேச்சிமுத்து, தா.ராஜா, சண்முகராஜ், சீனிவாசன், புவிராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

