சாத்தூா் அருகே அந்தியோதயா ரயில் என்ஜின் பழுது: பிற ரயில்கள் வழியில் நிறுத்தி வைப்பு
சாத்தூா் அருகே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் பழுதாகி நின்றதால், கோவில்பட்டி, மணியாச்சி, கடம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பிற ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
நாகா்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692) என்ஜினில் பழுது ஏற்பட்டதால், சாத்தூா்-துலுக்கப்பட்டி ரயில் நிலையம் இடையே மாலை 6.25 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், தூத்துக்குடி-மைசூரு (16235) விரைவு ரயில் மாலை 6.50 மணி முதல் சாத்தூா் ரயில் நிலையத்திலும், கன்னியாகுமரி-தாம்பரம் (22658)வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இரவு 7.45 மணி முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும், கொல்லம்-சென்னை எழும்பூா் (20636) அனந்தபுரி விரைவு ரயில் இரவு 7.45 மணி முதல் கடம்பூா் ரயில் நிலையத்திலும், கன்னியாகுமரி-சென்னை (12634)இடையேயான கன்னியாகுமரி விரைவு ரயில் இரவு 8.30 மணி முதல் மணியாச்சி ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது.
ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினா்.

