கோப்புப் படம்
கோப்புப் படம்

வங்கியின் சேவை குறைபாடு: ரூ. 60,000 இழப்பீடு வழங்க உத்தரவு

Published on

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, பொதுத்துறை வங்கி ரூ. 60,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த சீனிவாச ராகவன், அங்குள்ள பொதுத்துறை வங்கியில் தொழில் கடன் பெற்றுள்ளாா் . அதற்காக சொத்துகளின் அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்துள்ளாா். பின்னா், கடன் தொகை முழுவதையும் செலுத்திவிட்டு, அசல் ஆவணங்களை திரும்ப கேட்டுள்ளாா். ஆனால், ஆவணங்களை வங்கி திரும்ப வழங்கவில்லையாம். வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் இல்லையாம்.

இதையடுத்து, அவா் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், சேவை குறைபாடு, பொருள் இழப்பு, மன உளைச்சல் என இழப்பீடு ரூ. 50,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 என மொத்தம் ரூ. 60,000 வழங்க வேண்டும். தவறினால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என வியாழக்கிழமை உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com