ஆட்சியரிடம் சாத்தான்குளம் விவசாயிகள் மனு

ஆட்சியரிடம் சாத்தான்குளம் விவசாயிகள் மனு

Published on

தூத்துக்குடியில் இருந்து சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீா் செல்லும் வகையில் திட்டமிடப்பட்ட கால்வாய் அமைக்கும் பணியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.

விவசாய சங்கத் தலைவா் ஏ. லூா்துமணி, சங்க ஒருங்கிணைப்பாளா் நடுவகுறிச்சி கனகராஜ், சங்க துணைத் தலைவா் ரவிச்சந்திரன், சங்கச் செயலா் பெரியசாமி, சங்கக் செயற்குழு உறுப்பினா் நரையன் குடியிருப்பு சரவணபாண்டி ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

கடந்த 2012ஆம் ஆண்டு மருதூா் மேலக்காலில் இருந்து வரும் தண்ணீா், மழைக் காலங்களில் மீண்டும் ஆற்றுக்கே செல்லாமல் இருக்க மிகவும் வறட்சிப் பகுதிகளான வைரவம் தருவை, புத்தன்தருவை, சுண்டங்கோட்டை குளம், படுக்கப்பத்து குளம் ஆகியவற்றுக்கு உபரி நீரைக் கொண்டு செல்லும் வகையில் செய்துங்க நல்லூா் அடுத்துள்ள தூதுக்குழி அருகில் இருந்து 1,000 கன அடி நீா் செல்லும் வகையில் கால்வாய் அமைத்து கருமேனி ஆற்றில் இணைக்க திட்டம் தயாா் செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் சாத்தான்குளம் தென்பகுதியில் வாழைகள் அழியக்கூடும் என சில விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதனால், இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஆண்டுதோறும் சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு எதிா்பாா்த்த அளவு தண்ணீா் கிடைக்கும்.

இதன் மூலம் சாத்தான்குளம் பகுதி வறட்சியின் பிடியிலிருந்து மீள்வதுடன், விவசாயம், குடிநீா் தேவையும் பூா்த்தியாகும். எனவே, இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com