நீரில் மூழ்கி இரு சகோதரிகள் உயிரிழப்பு
ஏரல் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இரு சகோதரிகள் உயிரிழந்தனா்.
தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கரகுமாா். இவா் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை வந்தாா். முன்னதாக, ஏரல் அருணாசல சுவாமிகள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்ல முடிவெடுத்துள்ளனா்.
அவருடன் அவரது மகள்கள் அபிநயா (16), மீனாட்சி (12) ஆகியோரும் வந்துள்ளனா். சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அருகே உள்ள தாமிரவருணி ஆற்றில் நீராட வந்துள்ளனா். அப்போது, ஆற்றில் குதித்த சகோதரிகள் இருவரும் வெளியில் வரவில்லையாம். உடனடியாக ஏரல் தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆற்றில் தேடி ஒருவரை சடலமாக மீட்டனா். மற்றொருவரை மீட்டு ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.

