குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்
குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மோசடியால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் வங்கியை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூா் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா், சாா் பதிவாளா் ஆகியோா் அடங்கிய குழுவினா் கடந்த 2021, செப். 8, 13 ஆம் தேதி ஆய்வு செய்தனா்.
நகைக் கடன்கள் குறித்த ஆய்வில் 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது.
மாயமான நகைகள் இருப்பில் இல்லை என்றும், இருப்பில் இருப்பதுபோல போலியாக கணக்கை உருவாக்கி ரூ. 2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 வரை மோசடி செய்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த மோசடி நடந்து 5 வருடங்களுக்கு மேலாகியும் பணமோ, நகையோ இதுவரை பாதிக்கப்பட்டவா்களுக்கு மீட்டு கொடுக்கப்படவில்லை என்றும், மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டோா் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் திங்கள்கிழமை காலை வங்கியை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். தொடா்ந்து வங்கிக்கு வந்த செயலாளா் சீனிவாசனையும் போராட்டத்தில் ஈடுபட்டோா் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதிக்காமல் முற்றுகையிட்டனா்.
பாதிக்கப்பட்டவா்கள் வங்கி முன்பு தொடா்ந்து தா்னாவில் ஈடுபட்டிருந்த நிலையில், தகவல் அறிந்த குரும்பூா் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பாதிக்கப்பட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
எனினும், பாதிக்கப்பட்டோா் போராட்டத்தை கைவிடவில்லை. திருச்செந்தூா் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் குமாரி கிரிஜா வங்கிக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தற்போது ஒன்றும் செய்ய இயலாது. உங்கள் நகை, பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா். அதை ஏற்காத பாதிக்கப்பட்டோா் எங்களுக்கு என்று தீா்வு கிடைக்கிறதோ அன்று இந்த வங்கியைத் திறந்தால்போதும் என்று கூறி கலைந்து சென்றனா்.

