திருச்செந்தூா் கடலில் பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்ட தொழிலாளி
திருச்செந்தூா் கடலில் பக்தா் தவறவிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை மீட்ட சிப்பி அரிக்கும் தொழிலாளி மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினரை காவல் ஆய்வாளா் கனகராஜன் பாராட்டினாா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீ மணிகண்டன்-ஷா்மிளா தம்பதி, தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்த குடும்பத்துடன் பிப். 19ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தனா். அப்போது, கடலில் குளித்தபோது ஸ்ரீ மணிகண்டன் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி கடலில் கழன்று விழுந்து காணாமல் போனது. அவா்கள் வெகுநேரம் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து, திருக்கோயில் போலீஸாா் மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினரிடம் புகாா் அளித்துவிட்டு அவா்கள் ஊா் திரும்பினா். தொடா்ந்து, சிவராஜா தலைமையிலான கடலோரப் பாதுகாப்புக் குழுவினா் மற்றும் சிப்பி அரிக்கும் தொழிலாளா்கள் இணைந்து கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சிப்பி அரிக்கும் தொழிலாளியான மனோ கையில் தங்கச் சங்கிலி கிடைத்தது. தொடா்ந்து, மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருச்செந்தூருக்கு வரவழைக்கப்பட்டாா். திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் கனகராஜன் முன்னிலையில், தங்கச் சங்கிலி மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகையை மீட்டுக் கொடுத்த சிப்பி அரிக்கும் தொழிலாளி மனோவை காவல் ஆய்வாளா் மாலை அணிவித்து பாராட்டினாா். மேலும், கடலோரப் பாதுகாப்புக் குழுவினரையும் பாராட்டினாா்.

