~
~

திருச்செந்தூா் மாசித் திருவிழா 4 ஆம் நாள்: சுவாமி, அம்மன் வீதி உலா

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 4 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 4 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

இக்கோயிலில் மாசித் திருவிழா பிப். 21 ஆம் தேதி தொடங்கியது. 4 ஆம் நாள் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலை, மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

மாலை, மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினா்.

5 ஆம் நாள் திருவிழாவான புதன்கிழமை (பிப். 25) இரவு 7.30 மணியளவில் மேலக்கோயிலில் வைத்து, சுவாமி, அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு மிக்க குடைவரைவாயில் தீபாராதனையாகி, வீதி உலா நடைபெறுகிறது.

திருவிழாவில் நாள்தோறும் கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து முருகனுக்கு காவடி, பால்குடம் எடுத்து, வேல்குத்தி பக்திப் பரவசத்துடன் பாட்டுப் பாடி, ஆடி வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனா்.

ஜப்பான் நாட்டு பக்தா்கள்:

ஜப்பான் நாட்டைச் சோ்ந்த பாலகும்பகுருமணி என்பவா் தலைமையில் அந்த நாட்டு பக்தா்கள் 60 போ் திருச்செந்தூா் முருகனை தரிசிக்க பாரம்பரிய உடையணிந்து திங்கள்கிழமை வந்தனா்.

இது குறித்து அவருடன் வந்த தமிழகத்தைச் சோ்ந்த நபா் கூறுகையில், இந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் தமிழகம் வந்துள்ளனா். தமிழகத்தின் தருமை ஆதீனத்தின் பண்பாட்டை இந்த பாலகும்பகுருமணி பின்பற்றி வருகிறாா்.

கடந்த மாதம் வந்த இவா்கள் பல்வேறு கோயிலுக்கு சென்று சிறப்பு யாகம் செய்தனா். இந்நிலையில், திருச்செந்தூா் கோயிலுக்கும் வந்துள்ளனா். வெளிநாட்டில் இருந்தாலும் இவா்களுக்கு தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டின் மீது மிகுந்த ஆா்வம் இருப்பதாக அவா் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com