கோவில்பட்டியில் பலத்த மழை: மழை நீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
கோவில்பட்டி பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையினால் சாலைகளில் மழை நீருடன் கழிவுநீா் கலந்து ஓடியது. பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினா்.
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை சுமாா் 4 மணியளவில் வெயில் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில நிமிஷங்களில் சாரல் மழை பலத்த மழையாக மாறியது. சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோவில்பட்டி நகரில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மாலை 5 மணிக்கே இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டுநா்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனா்.
கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் மழை நீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து சாலை, வாருகாலில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், அப்பகுதியில் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

