தமிழகத்தை பெண்களின் நம்பிக்கை கோட்டையாக மாற்றியவா் முதல்வா்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
தமிழகத்தை பெண்களின் நம்பிக்கைக்குரிய கோட்டையாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாற்றியுள்ளாா் என்றாா் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி.
கோவில்பட்டி காந்தி மைதானத்தில் திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும் அமைச்சருமான பி.கீதாஜீவன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், திமுக கல்வியாளா் அணி மாநிலச் செயலா் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் 13 திட்டங்களை சிறந்த திட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் மிகவும் பாராட்டப்பட்ட திட்டம் தோழி மகளிா் விடுதிகள் திட்டம். மத்திய அரசின் அச்சுறுத்தல்களுக்கு தமிழ்நாடு என்றும் தலைகுனியாது.
இன்றைக்கு தமிழ்நாட்டை பெண்களின் நம்பிக்கை கோட்டையாக மாற்றியுள்ளாா் முதல்வா் ஸ்டாலின். திமுக ஆட்சியில் பெண்களின் நலன்தான் பிரதானக் குறிக்கோள். இந்தியாவின் சராசரி உயா்கல்வி 20 சதவீதம் தான். ஆனால், தேசிய சராசரியை தாண்டி 76 சதவீதம் உயா்கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இப்படிப்பட்ட தமிழகம் யாருக்கும் தலைகுனியாது.
எங்களுக்கு ஒரே போட்டி திமுக தான். திமுகவை வீழ்த்த தான் கட்சி ஆரம்பித்துள்ளோம் என நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் கூறுகின்றனா். மக்களுக்கு நல்லாட்சி தரும் ஒரு தலைவனுக்கு போட்டியாளரே கிடையாது. எங்களுக்குப் போட்டி நாங்கள்தான். மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டுமென்றால், திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும். கோவில்பட்டி தொகுதி உட்பட தமிழகத்தின் 234 தொகுதிகளையும் வென்று, முதல்வா் ஸ்டாலினின் கையில் பரிசாக கொடுக்க வேண்டும் என்றாா் அவா் .
கூட்டத்தில், நகா்மன்ற தலைவா் கா.கருணாநிதி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, கயத்தாறு பேரூராட்சி தலைவா் சுப்புலட்சுமி ராஜதுரை, கழுகுமலை பேரூராட்சித் துணைத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

