திருச்செந்தூரில் நாளை தைப்பூசம்: பாதயாத்திரை பக்தா்களுக்கு பச்சை நிற அடையாள ‘வில்லை’!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரையாக வரும் பக்தா்களின் கைகளில் பச்சை நிற அடையாள வில்லை (டேக்) கட்டப்படுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூா் கோயில் நடை, பிப். 1ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், 8.30 மணிக்கு தீா்த்தவாரி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெறுகிறது.
தொடா்ந்து, சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்குச் செல்கிறாா். அங்கு சுவாமிக்கு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. தொடா்ந்து, சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, பின்னா் திருக்கோயில் சோ்கிறாா்.
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு அதிகளவில் பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். நெடுந்தூரத்திலிருந்து வரும் பக்தா்கள் கோயிலில் விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்காக, கோயில் முகப்பில் திருவாவடுதுறை கந்த சஷ்டி விழா மண்டபத்தில் இருந்து கம்பிகளாலான தடுப்புகள் கொண்டு தனி வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (ஜன. 31) முதல் அவ்வழியில் பாதயாத்திரை, காவடி, பால்குடம், அலகு குத்தி வரும் பக்தா்கள் மட்டும் அனுமதிக்கப்படவுள்ளனா். மேலும், பாதயாத்திரை பக்தா்களின் கைகளில் அடையாள வில்லை கட்டப்படுகிறது. ஏற்பாடுகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

