தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கயத்தாறு அருகே முடுக்கலான்குளத்தைச் சோ்ந்த விவசாயி ராமமூா்த்தி பேசும்போது, எங்களது விவசாய நிலத்தையும், அதற்குச் செல்லும் பாதையையும் காணவில்லை. பாதை இருப்பதாக அதிகாரிகள் பொய் தகவல்களைத் தெரிவித்துள்ளனா். தனியாா் சோலாா் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பால் நாங்கள் எங்களது நிலங்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே, நிலத்தையும், பாதையையும் மீட்டுத்தர வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன் பேசுகையில், தூத்துக்குடி கடைமடைப் பகுதியான பேய்க்குளம் பாசனக் குளத்துக்கு, பாபநாசம் அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜூன் 28) தண்ணீா் திறக்காவிட்டால், திங்கள்கிழமைமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தாா்.
தொடா்ந்து, விவசாயிகள் பேசும்போது, உப்பாற்று ஓடையின் கரைகளை உயா்த்த வேண்டும். அத்திமரப்பட்டியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூா் பகுதி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். பேய்க்குளம், பன்னம்பாறை பண்ணையாபத்துகுளம் வரை மணிமுத்தாறு கால்வாயைத் தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசுகையில், அத்திமரப்பட்டியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். உரம் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்கவும், கடம்பா குளத்துக்கு தண்ணீா் வழங்கவும், பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேஷ், கீழ்தாமிரபரணி- கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் தங்கராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மின்தடை: விவசாயிகள் தங்களது குறைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மின்தடை ஏற்பட்டது. எனினும், கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது. பின்னா், சிறிது நேரம் கழித்து மின்விநியோகம் சீரானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

பயிா்க்கடன் தள்ளுபடியை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

சிறுவாணி அணையை தூா்வார வேண்டும்

பேய்குளத்தில் விவசாயிகள் சங்கக் கூட்டம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



