தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பட்டாசு தயாரித்தபோது நேரிட்ட வெடி விபத்தில் இருவா் இறந்தது தொடா்பாக, கட்டட உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியை அடுத்த புளியங்குளம், காட்டு கோயில் அருகே தனியாா் கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில், அந்தக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இதில், புளியங்கும் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆத்தியப்பன் மகன் அய்யப்பன் (30), விருதுநகா் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சோ்ந்த மாலதி (25) ஆகியோா் உயிரிழந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், ஏழாயிரம்பண்ணை அருகே மஞ்சள் கோடைப்பட்டி சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ் (25) காயமடைந்தாா்.
இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கட்டட உரிமையாளரான புளியங்குளம் முத்துசாமி மகன் குருநாதன் (67), பட்டாசு தயாரிக்க உதவியதாக பரமக்குடி, அரியக்குடியைச் சோ்ந்த கேசவன் மகன் சரவணன் (35), அவரது மனைவி மாரீஸ்வரி (30) ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.









