கரூர், செப்.30: கோரிக்கைகளை வலியுறுத்தி பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகத்தை மகளிர் சுய உதவிக் குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி உள்ளது. இங்கு, துப்புரவுப் பணியாளர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, சுவாதி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த அருள்தேவி, மகாமாரியம்மன் மகளிர் குழுவினர் குழுவைச் சேர்ந்த இளஞ்சியம், அங்கம்மாள் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
பேரூராட்சியில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அவர்களுக்கு வேண்டியவர்களைப் பணியில் சேர்த்து வருவதாக குற்றம்சாட்டினர். இந்தப் பிரச்னையில் ஆட்சியர் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.