யாருக்காக இந்த படக் காட்சி?

திருச்சி, நவ. 15: ஒரேயொரு நபர் வேன் ஓட்டுகிறார்- கூடவே படமும் ஓட்டுகிறார். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத் திட்டச் சாதனைகளை- செயல்படாத ஒலிபெருக்கி விளக்குகிறத
Updated on
2 min read

திருச்சி, நவ. 15: ஒரேயொரு நபர் வேன் ஓட்டுகிறார்- கூடவே படமும் ஓட்டுகிறார். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத் திட்டச் சாதனைகளை- செயல்படாத ஒலிபெருக்கி விளக்குகிறது.

    அண்மையில் சென்னையில் நடைபெற்ற செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர்களிடம் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு, திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ள சாதனைப் படக்காட்சி திரையிடும் நிகழ்ச்சிதான் இப்படித் தொடங்கியுள்ளது.

   தமிழக அரசின் சாதனைத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் மூலம் படக்காட்சியை காண்பிக்க  முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதற்கென அண்மையில் நடைபெற்ற செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான கூட்டத்தில் சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

   இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது படக்காட்சித் திரையீடு. நவ. 15-ம் தேதி திருச்சி மாநகரில் விறகுப்பேட்டை, காஜாபேட்டையிலும், நவ. 16-ம் தேதி அரியமங்கலம் வார்டு அலுவலகம் மற்றும் சங்கிலியாண்டபுரத்திலும் படக்காட்சி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  இதைத் தொடர்ந்து, 18-ம் தேதி லால்குடி ஊராட்சி ஒன்றியம் அப்பாதுரையிலும், தாளக்குடியிலும், 19-ம் தேதி லால்குடி ஊராட்சி ஒன்றியம் வாளாடி, சிறுமருதூரிலும், 20-ம் தேதி லால்குடி- திருமணமேடு, நெருஞ்சாலைக்குடியிலும் இந்தக் காட்சி திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

   அறிவிக்கப்பட்டபடி, திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் வேன் விறகுப்பேட்டையிலும், இரவு 7.15 மணிக்கு பாலக்கரை அண்ணா சிலை அருகேயும் நிறுத்தப்பட்டது.

   சென்னையில் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் "கிலோ அரிசி ரூ.2-க்கு வழங்கும் திட்டத்துக்கான' முதல் உத்தரவில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டது தொடங்கி, புதிய தலைமைச் செயலகம் கட்டித் திறக்கப்பட்டது வரை உள்ள நிகழ்ச்சிகளின் படக் காட்சிகளின் தொகுப்பைக் கொண்டிருந்தது முதல் படம்.

    ஏறத்தாழ 15 நிமிஷங்கள் ஓடிய இந்த ஆவணப் படத்தில், கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு, திருச்சியில் நடைபெற்ற கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சென்னை புறநகர்ப் பகுதிகளில் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிகள், தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா வரை ஏராளமான நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் உள்ளன.

   படம் திரையிடப்பட்ட செய்தி - மக்கள் தொடர்புத் துறை வேனில் வைக்கப்பட்டிருந்த இரு ஒலிபெருக்கிகளில் ஒன்று செயல்படவில்லை. மற்றொன்றிலிருந்து வெளியாகும் அந்த சப்தம் 3 அடி தொலைவிலும்கூடத் தெளிவாகக் கேட்கவில்லை.

   "வேன் கிளீனர்' பதவியிடத்துக்கு வேலைக்கு நியமிக்கப்பட்ட அந்த ஒற்றை நபர்தான் வேனை ஓட்டுகிறார், படத்தையும் ஓட்டுகிறார். உள்ளூரில் இருக்கும் மக்கள் பிரதிநிதி உதவினால் அந்தக் கிளீனர் தப்பினார், இல்லாவிட்டால் அவர் பாடு இன்னும் சிக்கல்தான்.

  அடுத்த படம் தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் "தாயும் ஆனவர் கலைஞர்'. திரைப்படத் துறையினருக்கு அரசு செய்த உதவிகள், அதற்கான நிகழ்ச்சிகள் இந்தப் படத்தில் உள்ளன. இஹந்தப் படமும் ஏறத்தாழ 15 நிமிஷங்கள் ஓடுகின்றன. இந்தப் படம் எந்த வகையில் மக்களை ஈர்க்கும் எனத் தெரியவில்லை.

    முடிந்தது சாதனை விளக்கப் படக்காட்சி. உள்ளூர் மக்கள் பிரதிநிதியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு புறப்படுகிறது செய்தி - மக்கள் தொடர்புத் துறை வேன்.

  அதிகபட்சமாக 20 பேருக்கும் மேல் ஓரிடத்தில் இந்தப் படத்தைப் பார்ப்பதில்லை. நாளொன்றுக்கு இரண்டு இடங்களுக்கு மேலும் திரையிடவும் முடியவில்லை. கையிலிருக்கும் ஒலிபெருக்கிகளும் செயல்படவில்லை. ஒரே நபர் "படம் காட்டும்' (!?) திட்டத்தைச் செயல்படுத்துகிறார். இதுதான் முதல்வர் எதிர்பார்த்ததா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com