மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் ஜெயில் பேட்டை சாலை

திருச்சி, செப். 2: திருச்சி பாலக்கரை ஜெயில்பேட்டை சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.   வாகனங்கள் அதிகரித்த அள
Updated on
2 min read

திருச்சி, செப். 2: திருச்சி பாலக்கரை ஜெயில்பேட்டை சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

  வாகனங்கள் அதிகரித்த அளவுக்கு திருச்சி மாநகரப் பகுதியில் சாலை வசதி போதுமானதாக இல்லை என்பது நீண்ட நாள்களாக இருந்து வரும் பிரச்னை. இருப்பினும், ஏற்கெனவே உள்ள சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போக்குவரத்து நெரிசலை ஓரளவு சரிசெய்ய முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் யோசனை.

  மாநகரின் மையப் பகுதியான பாலக்கரையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்தது. குறுகிய சாலையைக் கடக்க முயலும் நபர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் இருந்தது.

  பாலக்கரை ரவுண்டானா அருகே நாள்தோறும் ஒரு விபத்து நிகழும் என்ற அளவுக்குப் போக்குவரத்து நெரிசல் பெரிய பிரச்னையாக இருந்து வந்தது.

இரு முறை உயிரிழப்பு ஏற்பட்டபோது அந்தப் பகுதி மக்கள் மறியல் போராட்டமும் நடத்தினர்.

  இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் மத்தியப் பேருந்து நிலையம் - சத்திரம் பேருந்து நிலையம் இடையே  இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் கிளைச் சிறை அருகேயுள்ள ஜெயில்பேட்டை சாலை வழியாகத் திருப்பிவிடப்படும் என அப்போதைய மாநகரக் காவல் ஆணையர் கருணாசாகர் அறிவித்தார்.

  40 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்பு வியாபாரிகள், வெங்காய வியாபாரிகளின் பிடியில் இருந்த அந்தச் சாலையில் போக்குவரத்து தொடங்கப்படும் என்ற காவல் துறையின் அறிவிப்பு மாநகர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

  ஏறத்தாழ 40 அடி அகலம் கொண்ட அந்தச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கிய பிறகே, திருச்சியில் இப்படியொரு விசாலமான சாலை இருப்பது பலருக்கும் தெரிய வந்தது.

  இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து தொடங்குவதால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை காவல் துறையினர் அழைத்துப் பேசினர். இதையடுத்து, சரக்குகளை ஏற்றி இறக்கிக் கொள்ள அதிக போக்குவரத்து இல்லாத ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது.

  கருணாசாகருக்குப் பிறகு மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற கே. வன்னியபெருமாளும் இந்த விதிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என கண்டிப்பாக அறிவித்திருந்தார்.

  சில மாதங்கள் கடந்த நிலையில் என்ன நடந்ததோ? தெரியவில்லை தற்போது, 40 அடி அகலம் கொண்ட சாலையில் இருபுறமும் தலா 6 அடி வீதம் வியாபாரிகள் பயன்பாட்டுக்கு ஒதுக்குவது எனக் காவல் துறை முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

  பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டுமே சாலை என்பதை காவல் துறை நிர்வாகம் மறந்து விட்டதோ? என்ற கேள்வி மாநகர மக்களிடையே தற்போது எழுந்துள்ளளது.

  இந்த பிரச்னையை மக்கள் பிரச்னையாக கருதி காவல் துறையினர் சரியான முறையில் கையாள வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். 40 அடி அகல சாலையில் போக்குவரத்து தொடங்கிய போது சாலையின் இருபுறமும் குறிப்பிட்ட சில அடி தொலைவு இடங்களை வியாபாரிகள் தங்கள் வசதிக்காகப் பயன்படுத்தி வந்தனர். இதை போலீஸôர் கவனிக்கும் போதெல்லாம் வியாபாரிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

  ஆனால், 40 அடி அகலம் கொண்ட சாலையில் தற்போது இருபுறமும் தலா 6 அடி என்ற விகிதத்தில் அதிகாரப்பூர்வமாக வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படுவதால், 12 அடி போக மீதம் 28 அடி மட்டுமே உள்ளது. மேலும், சில அடிகளை அவர்கள்  பயன்படுத்தும் நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  கிளைச் சிறைக்கு இணையாக உள்ள சாலையில் கனரக வானகங்களின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதால், அனைத்து கனரக வாகனங்களும் இந்தச் சாலையைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகளோ அல்லது லாரிகளோ செல்லும்போது சாலையில் மிகுந்த நெரிசல் ஏற்படுவதுடன், வாகனங்களும் செல்ல இயலாது.

  மீதமிருக்கும் சில அடிகளில் இருபுறமும் எந்தவித அச்சமும் இல்லாமல் மக்கள் நடந்து செல்ல முடியுமா? என்பது காவல் துறை அதிகாரிகள் யோசிக்க வேண்டிய விஷயம்.

  "சாலை என்பது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டுமே. இந்தச் சாலையில் போக்குவரத்தை நிறுத்துவது என்பது நான் இருக்கும் வரை நடக்காத விஷயம்' என்று வியாபாரிகள் மத்தியில் அப்போதைய காவல் ஆணையர் கருணாசாகர் பேசிய வார்த்தைகளில் இருந்த பொது நலத்தை தற்போதைய அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com