பெரம்பலூர், அக். 24: பெரம்பலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக, திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
2006-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எம்.என். ராஜா நகர்மன்றத் தலைவராகவும், துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த கி. முகுந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பேரூராட்சியாக இருந்த பெரம்பலூர், நகர மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், கடந்த 2009 ஆம் ஆண்டு 2-ம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. ரமேஷ் நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும், அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் 1, 8, 10, 12, 18, 19 ஆகிய வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும், 2, 3, 4, 6, 9, 11 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 6 பேரும், 5, 7, 14, 15, 17, 20 ஆகிய வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 6 பேரும், 13, 16, 21 ஆகிய வார்டுகளில் தேமுதிக வேட்பாளர்கள் 3 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுகவும், திமுகவும் சம பலத்தில் உள்ளதால், துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், திமுக, அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள், சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவைக் கோரி, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, சுயேச்சை வேட்பாளர்களில் சிலரும் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, பெரம்பலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் அதிமுக - திமுக ஆகிய கட்சிகளுக்கிடையே பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.