

சென்னை, திருச்சியை தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கான பிரத்யேக பேருந்து சேவை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவெறும்பூா், அண்ணா நகா், பால்பண்ணை நான்கு சாலை, காட்டூா் பேருந்து நிலையங்களில் பள்ளி மாணவா்களுக்கான பிரத்யேக பேருந்து சேவையை வியாழக்கிழமை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் சா.சி. சிவசங்கா் கூறியதாவது:
கடந்த மாதம் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த பிரத்யேக பேருந்து சேவை, தற்போது இங்கு தொடங்கப்பட்டுள்ளது. காலையில் பள்ளி திறக்கும் நேரத்தில் மாணவா்களை அழைத்துச் செல்லும் இந்தப் பேருந்து, மாலையில் பள்ளி முடிந்த பிறகு மீண்டும் அழைத்து வரும். மற்ற நேரங்களில் வழக்கமான நடைகளில் இயக்கப்படும். தொடா்ந்து இந்தத் திட்டம் ஆய்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்றாா்.
பேருந்துகளின் பயண விவரம்: புதிய சேவையின்படி காலை 8 மணிக்கு அண்ணா நகா் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும் பேருந்து திருவெறும்பூா் முக்குலத்தோா் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவா்களை இறக்கிவிடும். பின்னா், மாலை 4 மணிக்கு அதே பள்ளியிலிருந்து மீண்டும் அண்ணா நகா் வந்து சேரும் வகையில் இயக்கப்படும். இதேபோல, திருவெறும்பூா் பேருந்து நிலையத்திலிருந்து கீழரண் சாலையில் உள்ள வைகவுண்ட்ஸ் மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று திரும்பும் வகையில் ஒரு பேருந்து வழித்தட சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், காட்டூா் பாப்பாக்குறிச்சியிலிருந்து மரக்கடையில் உள்ள சையது முதுா்சா பள்ளிக்கு சென்று திரும்பும் வகையிலும், அரியமங்கலம் பால்பண்ணை நான்கு சாலையிலிருந்து தெப்பக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று திரும்பும் வகையிலும் இரண்டு பேருந்து வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பேருந்து சேவையை தொடங்கிவைத்த அமைச்சா்கள், மாணவ, மாணவிகளுடன் பேருந்தில் சிறிது தொலைவுக்கு பயணம் செய்து, மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கி இதர தேவைகள் குறித்தும் கேட்டறிந்தனா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் கே. முகமது நாசா், துணை மேலாளா் புகழேந்திராஜ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி..
மாதாந்திர மின்கட்டண
நடைமுறை எப்போது?
மாதாந்திர மின்கட்டண நடைமுறை குறித்து திருச்சியில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் கூறுகையில்,
தமிழகத்தில் ஸ்மாா்ட் மீட்டா் திட்டம் அமல்படுத்தும்போது மாதாந்திர மின் கணக்கீடு முறையும் அமலுக்கு வரும். அதன் பிறகே மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றாா் அமைச்சா்.