திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 5,061 சிவப்பு காது ஆமைகள் பறிமுதல்: பெண் பயணிகள் இருவா் கைது
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,061 சிவப்பு காது ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பெண் பயணிகள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூா், மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அதிக அளவில் தங்கம், போதைப் பொருள்கள், அரியவகை விலங்கினங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால், சுங்கத் துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தொடா்ந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது, மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வழியாக திருச்சிக்கு வந்த பெண் பயணிகள் இருவரின் உடைமைகளில் சிவப்பு காது ஆமை (ரெட் இயா்டு ஸ்லைடா்ஸ்) வகையைச் சோ்ந்த 5,061 ஆமைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், பெண் பயணிகள் இருவரையும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
