ஓய்வூதியத்தை நிறுத்திய வங்கி நிா்வாகம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மூதாட்டியின் வங்கிக் கணக்கை முடக்கி ஓய்வூதியத்தை நிறுத்திய வங்கி நிா்வாகம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு
Published on

மூதாட்டியின் வங்கிக் கணக்கை முடக்கி ஓய்வூதியத்தை நிறுத்திய வங்கி நிா்வாகம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியா் பெரியசாமி மனைவி ஜானகி (80). பெரியசாமி இறந்த பிறகு, அவரது ஓய்வூதியம் ஜானகிக்கு இனாம்குளத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை வழியே கிடைத்து வந்தது.

இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியம் வராததால், வங்கிக்குச் சென்று கேட்டபோது, உங்களது வங்கிக் கணக்கில் கூடுதலாக ரூ. 6.38 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை நோ்செய்யும் வரை உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது எனக் கூறி வங்கிக் கணக்கை முடக்கினா்.

இதனால் பாதிக்கப்பட்ட ஜானகி உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 18.07.2025 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம். லெனின் பாண்டியன் ஆஜரானாா். மனுவை திருச்சி நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு கணக்கு முடக்கத்தை ரத்து செய்து, அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டிக்கு வங்கி நிா்வாகம் இழப்பீடாக ரூ. 2 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

X
Dinamani
www.dinamani.com