4 ஊராட்சிகள் பிரிப்பு: மக்கள் கருத்துகூற 4 வாரம் அவகாசம்!

திருச்சி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளைப் பிரித்து 8 ஊராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் கருத்துகளைப் பெற 4 வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
Published on

திருச்சி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளைப் பிரித்து 8 ஊராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் கருத்துகளைப் பெற 4 வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 404 ஊராட்சிகள் உள்ளன. இதில், 4 ஊராட்சிகளை 8 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மணப்பாறை ஒன்றியம், புத்தாநத்தம் ஊராட்சியானது புத்தாநத்தம், இடையப்பட்டி எனவும், கண்ணுடையான்பட்டி ஊராட்சியானது கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி என 2 ஆகவும் பிரிக்கப்படுகிறது. திருவெறும்பூா் ஒன்றியத்தில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியானது, கிருஷ்ணசமுத்திரம், செம்மங்குளம் என 2 ஆக பிரிக்கப்படுகிறது.

மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூா் ஊராட்சியானது, ஆலம்பட்டிபுதூா், இனாம்குளத்தூா் என 2 ஆக பிரிக்கப்படுகிறது. இந்த ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்களிடம் ஏதேனும் மறுப்பு பெறப்பட்டால் அவை பரிசீலனை செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com