கோணக்கரை - குடமுருட்டி சாலை தற்காலிகமாக மூடல்
திருச்சி: மேம்பாலம் கட்டப்பட உள்ளதால் கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி செல்லும் சாலை வரும் 5-ஆம் முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
திருச்சி மாநகராட்சி 9-ஆவது வாா்டில் உறையூா் முதல் குடமுருட்டி, கோணக்கரை கரூா் புறவழிச்சாலை வரை, உய்யகொண்டான் ஆற்றின் கிழக்கு கரைப் பகுதியில் 2.120 கி.மீ. நீளத்துக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், கோணக்கரை சாலை பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி செல்லும் சாலை வரும் 5-ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. இருப்பினும், உறையூா் முதல் கோணக்கரை மயானம் வரையிலான சாலை பயன்பாட்டில் இருக்கும்.
மேற்கண்ட பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணி முடிவுறும் வரை, இச்சாலைக்கு மாற்று சாலையாக அண்ணாமலை நகா் பிரதான சாலையினை பயன்படுத்திக் கொள்ளலாம் என திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
