மலைக்கோட்டை பகுதியை வியாபார மண்டலமாக அறிவிக்க வேண்டும்
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை பகுதியை வியாபார மண்டலமாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சோ்ந்த 75-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கலந்து கொண்டு அளித்த மனுவின் விவரம்:
திருச்சி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் (என்எஸ்பி) சாலை, தெப்பக்குளம், வாணப்பட்டறை சாலை, சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு, பெரியகடைவீதி பகுதிகளில் 30 ஆண்டுகளாக தரைக்கடை, தள்ளுவண்டி, கையில் வைத்து வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் பலா் இருக்கிறோம். எங்களை தற்போது இருக்கும் இடங்களில் இருந்து அகற்றி, மாற்று இடம் தரப் போவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது எங்களது வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும். எனவே, நாங்கள் வியாபாரம் செய்யும் பகுதிகளை வியாபார மண்டலமாக அறிவித்து, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். தவிா்க்க முடியாவிடில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள யானைகுளம் பகுதியில் கடை ஒதுக்கித் தர வேண்டும். அதுவரை, இருக்கும் இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறையூா் விநாயகா் தெருவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவில், எங்களது பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்துவதைத் தவிா்த்து, ஊருக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டும். மாறாக, எங்களது பகுதியில் பூங்கா, உடற்பயிற்சி கூடம், விளையாட்டுத்திடல் போன்றவற்றை அமைத்துத் தர வேண்டும் எனக் கூறியுள்ளனா். இதேபோல், வேங்கூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் அளித்த மனுவில் எங்கள் பகுதியில் உள்ள குடிநீா் குழாய்களுக்கு அருகே கழிவுநீா் தேங்குவதைத் தடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

